Thursday, April 14, 2011

தமிழக தேர்தல் 2011



இந்தவருடம் அக்டோபரில்தான் ஆண்டு விடுமுறைக்கு செல்வதாக இருந்தேன். ஆனால் புதிய ப்ராஜெக்ட் வர சற்று தாமதமானதாலும், சொந்தவேலைகள் கொஞ்சம் இருந்ததாலும் திடிரென முடிவெடுத்து கடந்த ஞாயிற்றுகிழமையே குடும்பத்துடன் கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன்.

ஏப்ரல் 13ல் தமிழகத்திற்கு தேர்தல் நடக்கவிருப்பது ஏற்கனவே தெரிந்து இருந்ததால், சென்னை வந்ததிலிருந்தே எப்போது ஒட்டு போடுவோம் என்று எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருந்தது. ஒட்டு போடுவேன் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவே இல்லை. எல்லாம் எதிர்பாராமலே நடந்த ஒன்று. வடசென்னை பாராளமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவான கொளத்தூர் தொகுதிதான் என்னுடையது. இந்த தொகுதியில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.



 
வாக்குச்சாவடி எங்கள் வீட்டு அருகிலேயே இருந்த தனியார் பள்ளி ஒன்றில் அமைந்து இருந்தது. ஒட்டு பதிவு தொடங்கும் நேரம் காலை 8 மணி என்றாலும் 7.30 மணியில் இருந்தே மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்றுகொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது. நான் தொடக்கத்தில் கூட்டம் இருக்கும் பிறகு குறைந்து விடும் என்று நினைத்து, காலை உணவை அருந்திவிட்டு மனைவியுடன் பொறுமையாக 11 மணிக்கு சென்றேன். அங்கு போய் பார்த்தல் மிக நீண்ட வரிசையில் வளைந்து வளைந்து கூட்டம் நின்றிருப்பதை பார்த்தவுடன் மலைப்பாக இருந்தது சரி வேறு வழியில்லாமல் வரிசையில் நின்று இருவரும் ஒட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வர ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர், இந்த தேர்தலில் தமிழக தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் அவர் சொல்வது சரி என்றுதான் பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு தேர்தல் கமிஷன் சப்தமில்லாமல் நிறைய சாதித்து இருக்கிறது. குறிப்பாக வோட்டுக்கு பணம் கொடுப்பதை தவிர்பதற்காக (முழுமையாக தவிர்க்கமுடியாமல் போனாலும்) அவர்கள் எடுத்த முயற்சி பாராட்டுகுரியது, நான் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொரு வெள்ளை சுவரையும் விடாமல் அரசியல் கட்சிகள் நீளநிறத்தில் சின்னங்களை வரைந்து நாசம் செய்ததும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதேல்லாம் அந்த மாதிரி எதுவும் கிடையாது. ஒலி பெருக்கிகளின் தொல்லை கிடையாது, ஆளும் கட்சிக்கு சாதகமாக வேலை செய்யும் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்வது, இப்படி தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியது என ஒவ்வொன்றும் பாராட்ட கூடியது.


 
சாதாரண டம்மி கமிஷனாக இருந்த தேர்தல் கமிஷனை இன்று பவர்புல் கமிஷனாக மாறுவதற்கு மிகமுக்கியமான காரணமாக திகழ்ந்தவர் தமிழகத்தை சேர்ந்த முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி திரு.T.N.சேஷன். அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை படிப்படியாக பயன்படுத்தி கொண்டுவருகிறது. தேர்தல் கமிஷன் இன்னும் தனது உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.


இந்த தேர்தலில் 77.4% சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் 22.6% பேர் வாக்களிக்க வில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஆகவே, இனிவரும் காலங்களில் ஒட்டு போடுவதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்க வழிவகை செய்யவேண்டும். தங்களுக்கு ஏதோ சம்பந்தமில்லாத ஒன்று என்று மக்களும் இறுந்துவிடகூடாது. தங்களது வாக்குரிமையை அவர்கள் சரியாக பயன்படுத்தவேண்டும். எந்த வேட்பாளர்கள்மீதும் ஒட்டுபோடா விருப்பம் இல்லை என்றால் 49-O சட்டத்தின் படி அதை பதிவு செய்யவேண்டும். ஜனநாயகம் தழைக்க மக்களின் பங்களிப்பும் நிச்சயம் அவசியம். அதற்கு ஜனநாயகம் அளித்திருக்கும் உரிமைகளை மக்கள் பயன்படுத்துவது மிக மிக அவசியம்.

குறிப்பு: இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் (சேஷன் புகைப்படம் தவிர ) வாக்குச்சாவடியில் நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது எடுத்தது

 

No comments: